திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி: தமிழக அரசு முடிவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மதுபானக் கூடத்தில் மட்டுமே இதுநாள் வரை மதுபானங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முடிவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எடுக்க வேண்டி உள்ளது. இதுநாள் வரையில் கிரிக்கெட் மைதானத்தில் மதுபானத்திற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணக் கூடங்களில் முறையான அனுமதி இல்லாமல் மதுபானம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், அரசு இதனை அறிவித்துள்ளது. பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என இதற்கான அனுமதி கட்டணங்கள் மாறுபடுகின்றன. இதற்கான விதிமுறைகளையும் அரசு வழங்கியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in