தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 9 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.23-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏப்.24, 25-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களிலும், ஏப்.26-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

ஏப்.22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 4 செ.மீ., கரூர் மாவட்டம் பாலவிடுதி, கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

9 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி, சேலம், மதுரையில் 104, திருச்சி, கரூர் பரமத்தியில் 103, வேலூர், நாமக்கல்லில் 102, தஞ்சாவூரில் 101, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in