Published : 14 Sep 2017 11:14 AM
Last Updated : 14 Sep 2017 11:14 AM

19 எம்.எல்.ஏக்கள் இன்று சபாநாயகரை சந்திப்பார்களா? அடுத்து என்ன?

முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இன்று விளக்கம் அளிக்க கடைசி நாள் என்பதால் விளக்கம் அளிக்க எம்.எல்.ஏக்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சபாநாயகரை சந்திக்க வேண்டும் என்ற கெடு இன்றுடன் முடிவடைகிறது, இன்று சபாநாயகர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். 19 எம்.எல்.ஏக்களும் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது அவ்வாறு வராவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு வராவிட்டால் சபாநாயகர் கொறடா ராஜேந்திரன் கடிதத்தை ஏற்று 19 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் மணியிடம்  கேட்டபோது அவர் கூறியதாவது;

19 எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை அடுத்து சபாநாயகர் கேட்ட விளக்கத்துக்கு பதில் அளிக்க வராவிட்டால் என்ன நடக்கும்?

முதல் தடவை விளக்கத்துக்கு பதில் அளிக்க வரவில்லை என்பதற்காக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

அவர்கள் தரப்பில் 15 நாட்கள் அவகாசம் கேட்டு சபாநாயகர் மறுத்துள்ள நிலையில் இதை அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா?

எதையும் இவர்கள் தீர்மானிப்பதில்லை, ஆட்டுவிக்கும் கை டெல்லியில் இருக்கிறது. அங்கிருந்து என்ன கட்டளை வருமோ அதைத்தான் நிறைவேற்றுவார்கள். ஆகவே இது ஒருவகை மிரட்டல் என்றே கருதுகிறேன்

நீங்கள் கூறுவது போல் தகுதியிழப்பு செய்ய முடியாது, ஆனால் இடைநீக்கம் செய்ய வாய்புள்ளது அல்லவா?

கட்டாயம் வாய்ப்புண்டு, சபாநாயகர் வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தலாம். அப்படி செய்தால் தினகரன் தரப்பு நீதிமன்றத்தை நாட வாய்ப்புண்டு.

நீதிமன்ற நடவடிக்கை சரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முதல் நாளே இடைநீக்கம் செய்தால் அது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக அமையும் அல்லவா?

அப்படியும் வாய்ப்பு உண்டு, இந்த ஆட்சியில் எதுவும் நடக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி:

அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு பின்னர் ஒன்றானது, ஓபிஎஸ் அணியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , சசிகலா, தினகரனை கட்சிப்பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்தும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் 19 பேருக்கும் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் கொறடா எங்களுக்கு முன் கூட்டியே உத்தரவிட்டு மீறியிருந்தால் அது தவறு, அவர் அப்படி உத்தரவிட்டு நாங்கள் மீறவில்லை, பெரும்பான்மை இழந்த அரசின் கொறடா எங்களை கட்டளையிட முடியாது என்றெல்லாம தினகரன் தரப்பில் பேட்டி அளித்தனர்.

ஆனால் கொறடா கடிதத்தை ஏற்று சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் இருவரும் சபாநாயகரை சந்தித்து தங்களுக்கு விளக்கமளிக்க மேலும் 15 நாள் அவகாசம் கேட்டனர். ஆனால் சபாநாயகர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த வாரம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் திடீரென அணி மாறினர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். சபாநாயகரை சந்தித்து விளக்கமும் அளித்தார். மறுபுறம் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸ் திடீரென தினகரனுக்கு ஆதரவாக ஆளுநரை சந்தித்து கடிதமும் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x