

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் 10 பெண்கள் பணிபுரிகின்றனர்.
நகராட்சியின் மேற்பார்வையில் செயல்படும் இந்த உணவகத்தில், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆணையர் அவ்வப்போது சென்று உணவருந்துவது உண்டு.
இந்நிலையில், வெளியூரில் இருந்து வந்து தங்கிப் பணியாற்றும் விருத்தாசலம் நகராட்சி அதிகாரிகள் சிலர், உணவக ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்தி, அசைவ பிரியாணி சமைக்கச் சொல்லி, அதை பார்சலாக எடுத்துச் சென்று சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து விருத்தாசலம் நகராட்சி ஆணையர் சேகரிடம் கேட்டபோது, “வருவாய் ஆய்வாளர் முருகேசன் என்பவர் முறையாகப் பணி செய்யாததால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த காழ்ப்புணர்ச்சியால், விரும்பத்தகாத சில அவதூறுகளைப் பரப்பியுள்ளார்” என்றார். வீடியோவை குறிப்பிட்டுக் கேட்டபோது, ‘‘இது பொய்யானது” என்று அவர் தெரிவித்தார்.