

உடுமலை: தாராபுரம் அருகே நல்லதங்காள் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு போராடுவது தொடர்பாக, எழுகாம்வலசு கிராமத்திலுள்ள அம்மன் கோயில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோனேரிப்பட்டி, பொன்னிவாடி, எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, "நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் நிலம், சுமார் 120 பேரிடம் இருந்து கையகப்படுத்தப் பட்டது. இதற்கு இழப்பீடாக மானாவாரி பூமி ஏக்கர் ரூ.9,000, தோட்ட பூமி ஏக்கர் ரூ.27,000 வழங்கப்படும் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இது மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து, கூடுதல் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மானாவாரி பூமி ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம், தோட்ட பூமி ஏக்கர் ரூ.1 லட்சமும், 15 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளில் இதுவரை 120 பேருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றனர்.