

சென்னை: தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.67 கோடி மின் நுகர்வோர் பேர் உள்ளனர். தினசரிமின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகா வாட் ஆகும். இதில் விவசாயத்தின் பங்கு 2,500 மெகா வாட்.
பொதுவாக கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகா வாட் மற்றும் குளிர் காலத்தில் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின் விசிறி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட் என்ற அளவைத் தாண்டி விட்டது. மேலும், விவசாயப் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்தப் பிரிவில்மட்டும் மின்சாரப் பயன்பாடு கூடுதலாக 727 மெகா வாட் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், கடந்த மாதம் 4-ம் தேதி தினசரி மின்தேவை முதல் முறையாக 17,584 மெகா வாட்டாக அதிகரித்தது.
இதற்கு முன் 2022 ஏப். 29-ம் தேதி 17,563 மெகா வாட் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதேபோல, கடந்த மாதம் 15-ம் தேதி தினசரி மின் தேவை 17,647 மெகா வாட்டாக அதிகரித்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் மின் நுகர்வு 18,053 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. இதற்கிடையே, ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தின் அளவு யூனிட்டாக கணக்கெடுக்கப்படுகிறது.
இதன்படி தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில்அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட்மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "தமிழக வரலாற்றில் முதன்முறையாக நேற்று (ஏப். 20) தமிழகத்தின் 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தேவை எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.