

சென்னை: தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள் திருத்தப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி முதல் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமைகளில் தலையீடு செய்வது போல் உள்ளது.
இந்த விதிகள், அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. மேலும் இவை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது மட்டுமின்றி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனவே, இவற்றை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஐசக் மோகன்லால், சேவியர் அருள்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் காட்சன், அருள்மேரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். "கடந்த 1973-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் 1975ல் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள், புதிய சட்ட விதிகளின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், 1975ம் ஆண்டு உத்தரவை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியது. அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, 1973ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என 2012ல் உத்தரவிடப்பட்டது" என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், "உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்" என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ளது. 1973-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.