Published : 27 Sep 2017 08:50 AM
Last Updated : 27 Sep 2017 08:50 AM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்களில் யார் கூறியது உண்மை? - பழனிசாமி, ஓபிஎஸ் விளக்கமளிக்க துரைமுருகன் கோரிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் கூறும் தகவல்கள் உண்மையா என்பதை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:

கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடையும் வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளது.

அமைச்சர்களின் கருத்து

இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் தவிர மற்ற யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியது அனைத்தும் தவறானது எனக் கூறியதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்வரின் பொறுப்புகளை வகித்த ஓபிஎஸ் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால், அவர் மவுனமாக இருக்கிறார்.

இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என்று கூறியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதுதான் உண்மையாக இருக்கும்.

ஆனால், அமைச்சர்கள் யார் கூறியது உண்மை என்பதை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தான் விளக்க வேண்டும். ஆனால் இருவரும் மவுனமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

சிபிஐ விசாரணை தேவை

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள், சந்தேகங்கள் தொடர்பாக மருத்துவமனையில் அவரைப் பார்ப்பதற்காக வந்த ஆளுநர், முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள், லண்டன், டெல்லியில் இருந்து வந்த மருத்துவர்கள் என பலரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவேதான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x