

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அண்ணாமன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன்(38). இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயசீலன், திருவாரூர் அருகே புலிவலத்தில் பைக் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், ஏப்.16-ம் தேதி இரவு மெக்கானிக் கடையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, பின்னவாசல் என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயசீலன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதற்காக, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் உரிய சான்றுகள் பெறப்பட்டன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் சென்று சென்னை, திருச்சி மற்றும் இதர மருத்துவமனைகளில் இருந்து வந்திருந்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து ஜெயசீலனின் கல்லீரல், இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகளை பிரித்து எடுத்து உரிய மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர்.