Published : 23 Sep 2017 08:57 AM
Last Updated : 23 Sep 2017 08:57 AM
அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் பரமானந்தம். இவர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக எஸ்.சி. பிரிவு செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, தன் வீட்டினுள்ளே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதனால் வீட்டில் இருந்த சோபா தீப்பிடித்து எரிந்ததாகவும் பரமானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, திருவேற்காடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். நேற்று மாலை, பரமானந்தத்தை கைது செய்தனர். பரமானந்தம் அளித்த வாக்கு மூலத்தின் வாயிலாக தெரிய வந்ததாவது:
கடந்த ஆண்டு நடந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவுக்காக பரமானந்தத்துக்கு சொந்தமான நிலத்துக்கு அருகே பொதுமக்கள் யாகசாலை, பந்தல் அமைத்தனர். இதற்கு எதிராக பரமானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள் பூந்தமல்லி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் விளைவாக பொதுமக்கள், யாகசாலைக்காக அமைக்கப்பட்ட பந்தலை அகற்றிவிட்டு, அதே இடத்தில் கொட்டகை அமைத்தனர்.
அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பரமானந்தம், தனது தோல்வியை திசை திருப்புவதற்காக, தன் வீட்டுக்குள் தானே தீயை வைத்துவிட்டு, மர்ம நபர்கள் குண்டு வீசியதாக நாடகமாடியது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT