Published : 19 Sep 2017 06:25 AM
Last Updated : 19 Sep 2017 06:25 AM

வெளிநாட்டு கார் இறக்குமதி வழக்கு: நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரபஞ்ச அழகியான நடிகை சுஷ்மிதா சென் நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த 2005-ல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை ரூ.55 லட்சத்துக்கு வாங்கினார். ஆனால் அந்த காரின் மாடல் 2004 என சென்னை துறைமுகத்தில் போலியாக கணக்கு காட்டி இறக்குமதி செய்ததன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக மும்பையைச் சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் மீதும், நடிகை சுஷ்மிதா சென் மீதும் சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கில் ஆஜரான நடிகை சுஷ்மிதா சென், ‘‘பழைய கார் என்று நினைத்துதான் அதை வாங்கினேன். அதன் பின்னால் உள்ள மோசடி குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும் வரிஏய்ப்பு செய்ததாக விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.22 லட்சத்தையும் முறையாக நான் செலுத்திவிட்டேன். எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்’’ என கோரினார். இதையடுத்து அவர் சுங்கத்துறை தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

பின்னர் நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு சுஷ்மிதா சென் தொடர்ந்து ஆஜராகவில்லை என்பதால் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரியும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் சுஷ்மிதா சென் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பிடிவாரண்டுக்கு இடைக்காலத் தடை விதித்து செப்டம்பர் 18-ம் தேதி சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் எதிர்தரப்பினர் அவரிடம் குறுக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை சுஷ்மிதா சென் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர்ஹூசைன் முன்பாக ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x