Last Updated : 16 Sep, 2017 03:24 PM

 

Published : 16 Sep 2017 03:24 PM
Last Updated : 16 Sep 2017 03:24 PM

திருமணத்தை நிறுத்துவதுதான் சமூகத்தின் விடிவுகாலம்: கரிசல் விருது விழாவில் கி.ரா. பேச்சு

திருமணத்தை நிறுத்துவதுதான் சமூகத்தின் விடிவுகாலம். இதை யாரும் கேட்கமாட்டார்கள். பின்னர், இப்படி சொன்னதை நினைத்துப் பார்ப்பார்கள் என்று எழுத்தாளர் கி.ரா.பேசினார்.

எழுத்தாளர் கி.ரா. 95 விழா புதுச்சேரியில் இன்று தொடங்கியது. இவ்விழாவில் கரிசல் விருது வழங்கும் நிகழ்வு நடந்தது. நாள்முழுக்க நடக்கும் இந்நிகழ்வில் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்த எழுத்தாளர் கி.ரா. 'மனித இயல்புகளை சொல்வதுதான் இலக்கியம். தைரியமாக சொல்வதை வரவேற்பது அவசியம்' என்று குறிப்பிட்டார்.

கி.ராஜநாராயணனன் என்னும் படைப்பாளுமை, தமிழ் உலகம் இதுவரை கண்டிராத அபூர்வம். இந்த நதிமூலம் 1923 ல் உற்பத்தியாகி, தீரா நதியாய் பெருக்கெடுத்து ஓடி, 2017 செப்டம்பர் 16ல் தன் 95 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த எழுத்தாளுமையின் பிறந்தநாளைப் பெருவிழாவாகப் புதுச்சேரியின் இலக்கியவெளி கொண்டாட்டத்தை இன்று காலை முதல் இரவு வரை நடத்துகிறது.

புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக விருந்தினர் இல்ல மாநாட்டு அரங்கத்தில் விழா நடக்கிறது.

கி.ரா. எழுதிய மற்றும் கி.ரா. குறித்த நூல்கள் வெளியிடப்படுகின்றன. கி.ரா.பற்றிய கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. கி.ரா. வாழ்வு தொடர்பான ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. கி.ரா.வின் கதைகளை கதைசொல்லிகளும், கி.ரா. பற்றிய கருத்துக்களை எழுத்தாளர்களும், கி.ரா.வின் மாணவர்களும் பகிர்ந்து கொண்டனர்.

கரிசல் விருதுகள்

விழாவில் கரிசல் விருது 2017 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வழங்கும் கரிசல் இலக்கிய விருது இவ்வாண்டு ( 2017) சிறந்த சிற்றிதழுக்காகத் 'தளம்' இலக்கியக் காலாண்டிதழுக்கு வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளருக்கான கரிசல் விருது 2017 - எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்டது.

வாகை முற்றம் என்ற தலைப்பில் கி.ரா. வாசகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டுப்புற கதைகள் சேகரிக்கும்போது இந்த கதைகளை சேகரிக்காதீர்கள் என்பார்கள். மக்களிடத்திலிருந்துதான் சேகரிப்பேன். விரசமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சேகரிப்பேன். மொழியென்பது இது உண்டு, இது இல்லை என்பதில்லை. சிறு குழந்தைகள் பள்ளிகளில் கற்கும் மொழிகளில் முதலில் கெட்ட வார்த்தைகளை கற்பார்கள்.

டிக்‌ஷ்னரி வாங்கியதும் அந்த வார்த்தைகளை தேடிப் பார்ப்பேன். மனித இயல்புகளை சொல்வதுதான் இலக்கியம் தைரியமாக சொல்வதை வரவேற்பது அவசியம். காலமெல்லாம் ஒதுக்கி வைக்கக் கூடாது. தற்போது வேறுவடிவத்தில் மாறியுள்ளது. உயர் குலத்தோரைவிட தாழ்ந்த குலத்தோர் மிகத்திறமையுடன் இருந்தால் ஏற்க மாட்டார்கள், இதன் மூலத்தை பார்த்தால் ஜாதி என்று தெரியும். அதை எப்படி ஒழிப்பது என்று கேள்வி வரும்.

ஜாதியை உண்டாக்கியவர்கள் வருத்தப்படும் வகையில் ஏதும் நடக்காத வரையில் அது ஒழியாது. சிலர் எல்லாவிதமான வீடுகளிலும் சாப்பிடுவார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணை இதர சமூகத்தினருக்கு திருமணம் செய்து தர மறுப்பார்கள். உண்மையில் கல்யாணம்தான் இடிக்கிறது. திருமணத்தை நிறுத்துங்கள். பிரான்ஸ் நாட்டில் திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் வாழும் போக்கு உள்ளது. நாட்டை நிர்வகிப்பவர்களே அப்படிதான் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தை நிறுத்துவதுதான் சமூகத்தின் விடிவுகாலம். இதை யாரும் கேட்கமாட்டார்கள். பின்னர், இப்படி சொன்னதை நினைத்துப் பார்ப்பார்கள்.

எனது பேத்தி, முஸ்லிமை திருமணம் செய்ய விரும்பினாள். நேற்றுதான் திருமணம் நடந்தது. இந்து -முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் போது என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம் நடந்துள்ளது. தைரியமாக ஏதாவது செய்யவேண்டும். இதை தியாகம் என்று சொல்ல மாட்டோம். குழந்தைகளின் சந்தோஷம்தான் முக்கியம்" என்று குறிப்பிட்டார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x