Published : 28 Sep 2017 09:15 AM
Last Updated : 28 Sep 2017 09:15 AM
மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்ய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.
சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீன மடம் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின் 292- வது ஆதீனமாக 1980 முதல் அருணகிரிநாத சுவாமி இருந்து வருகிறார்.
பெங்களூர் பிடுதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தாவை 293-வது ஆதீனமாக 2012-ல் அருணகிரிநாதர் நியமனம் செயதார்.
இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கக் கோரி, மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 2013-ல் விசாரணைக்கு வந்தபோது இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டதாக அருணகிரிநாதர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே, மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக திருநாவுக்கரசு என்பவரை அருணகிரிநாதர் நியமித்தார்.
இந்நிலையில், நித்யானந்தா உயர் நீதிமன்றக் கிளையில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘என்னை நீக்க அருணகிரிநாதருக்கு அதிகாரம் இல்லை. திருநாவுக்கரசு என்பவரை அடுத்த ஆதீனமாக நியமனம் செய்ததும் செல்லாது.
293-வது ஆதீனம் என்ற முறையில் மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீஸுக்கு உத்தரவிடுமாறு’ கோரியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT