Published : 11 Sep 2017 10:25 AM
Last Updated : 11 Sep 2017 10:25 AM

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சடலத்துடன் உறவினர்கள், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள புலிக்குளம் பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி வேல்முருகன் மகன் நவீன்குமார் (18). இவர், நேற்று முன்தினம், பொன்னேரி ரயில் நிலையம் அருகே கொக்குமேடு பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நவீன்குமாரின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், நவீன்குமாரின் சடலத்துடன் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புலிக்குளம் பகுதியில், பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நவீன்குமாரை, பொன்னேரி அருகே உள்ள ஆதிரேயமங்கலம் பகுதியை சேர்ந்த சண்டை நடிகர் உள்ளிட்ட இருவர் தாக்கியதால் நவீன்குமார் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, அவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும்” எனக்கோரி இந்த சாலை மறியல் நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி டிஎஸ்பி ராஜன் சம்பவ இடத்துக்கு வந்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானப்படுத்தினார். இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், நேற்று திருவொற்றியூர் -பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x