“ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்... மறந்துவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?” - தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்
டிடிவி தினகரன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது.

தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தடுக்க வந்த பாட்டியும் வெட்டிக் கொல்லப்பட்டார். மருமகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். | வாசிக்க > கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in