Last Updated : 15 Apr, 2023 01:53 PM

 

Published : 15 Apr 2023 01:53 PM
Last Updated : 15 Apr 2023 01:53 PM

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்: எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட 140 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

விருதுநகர்: விருதுநகரில் இன்று காலை ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை விருதுநகர் மதுரை சாலையில் உள்ள வி.வி.ஆர். சிலை ரவுண்டானா அருகே காங்கிரஸ் கட்சியினர் ஒன்று கூடினர். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில், மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸார், மகிளா காங்கிரஸார் மற்றும் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ரயில்வே பீடர் சாலை வழியாக ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி இழப்பு செய்ததை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அதன்பின், ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் எட்டு பெண்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x