சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் பலி

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து
Updated on
1 min read

சிவகாசி: சிவகாசி அருகே பட்டா ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

சிவகாசியைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜ். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று வழக்கம்போல் இந்த பட்டாசு ஆலையில் 120 பணியாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தரை சக்கர பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருட்களை செலுத்திக் கொண்டிருந்த இடத்தில் ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், இடையங்குளத்தை சேர்ந்த தங்கவேல் (55), கருப்பசாமி (32), ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மாரித்தாய், கருப்பம்மாள் ஆகிய இரு பெண்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் இரண்டு பட்டாசு தயாரிப்பு அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து மாரனேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in