

சென்னை: திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கருணாநிதி! அதைத்தான் திருநங்கைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
கருணாநிதி வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்!" என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி.ஐஸ்வர்யாவின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவருக்கு தமிழக முதல்வர் வழங்கி பாராட்டினார்.