Published : 20 Sep 2017 07:49 AM
Last Updated : 20 Sep 2017 07:49 AM

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை எதிர்த்து வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பேராசிரியர் அனந்த பத்மநாபனின் நியமனம் தொடர்பான அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளரான உச்சிமாகாளி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைகழகத்துடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ள பேராசிரியர் அனந்தபத்மநாபனும் நியமிக்கப்பட்டுள்ளார். இது பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது. இதற்கு தடை விதிக்கவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் , ‘‘தேடுதல் குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அக்குழுவின் தலைவராக உள்ள நீதிபதி லோதா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘அனந்த பத்மநாபன் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்த பிறகுதான் தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஆவணங்களைப் பார்க்கும்போது அவர் தேடுதல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிறகுதான் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. ஏன் இந்த முரண்பாடு?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் தேடுதல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் அனந்தபத்மநாபன் தொடர்பான அசல் ஆவணங்களை நாளை (இன்று) தாக்கல் செய்யவேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x