Published : 31 Aug 2017 01:09 PM
Last Updated : 31 Aug 2017 01:09 PM

புளூவேல் விபரீதம்: பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழியுங்கள்; பெற்றோர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

புளூவேல் விளையாட்டினால் இளைய சமுதாயம் உயிரை மாய்த்துக்கொள்வதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்தார்.

இது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த சிறப்பு பேட்டி:

புளூவேல் விவகாரத்தில் மதுரை மாணவர் மரணத்தை ஒட்டி பெற்றோர்கள் பீதியில் இருக்கின்றனர். இது சம்பந்தமாக சென்னை காவல் துறை நடவடிக்கை என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது?

இந்த விவகாரத்தில் சென்னை காவல்துறை சார்பில் வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது அதில் புகார் அளிக்கலாம், அல்லது ஆணையருக்கான தனி வாட்ஸ் அப் எண் உள்ளது அதிலும் புகார் அளிக்கலாம்.

இதை தவிர எந்த அதிகாரியையும் உதவிக்காக அணுகலாம். அதற்கான வழிகாட்டுதல் கொடுத்துள்ளோம்.

இது போன்ற ஆபத்தான விளையாட்டை இளைய சமுதாயம் தேடிச்சென்று சிக்கி கொள்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன?

புளூவேல் விளையாட்டு குறித்து ஏற்கனவே ஒரு வேண்டுகோள் அளித்துள்ளேன். அது காவலர் வலைதளம் மற்றும் முகநூலில் போடப்பட்டுள்ளது.

புளூவேல் விளையாட்டை தேடிப்போய் அதில் சிக்க வேண்டாம். விளையாட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளபோது இதில் ஏன் சிக்க வேண்டும்.

இந்த விளையாட்டி 50 வகை டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது கடைசியில் தற்கொலை செய்துகொள்ள தூண்டப்படுகிறது. விளையாடுபபவர்கள் அவர்களது நண்பர்களையும் இதில் இணைக்கிறார்கள் இது போன்ற மோசமான விளையாட்டிலிருந்து விலகி நிற்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். எந்த வயதில் இது போன்ற இணையதள பயன்பாட்டை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை பெற்றோருக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

பிள்ளைகளின் நடத்தையை கவனிக்க வேண்டும். அவர்கள் நடத்தையில் மாற்றம் வருகிறதா? முரட்டுத்தனமாக நடந்துக்கொள்கிறார்களா? அதிக நேரம் இணையதளத்தில் இருக்கிறார்களா? தனிமையை விரும்புகிறார்களா? போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.

பிள்ளைகள் எந்த தளத்தில் அதிகம் இருக்கிறார்கள் எனபதையும் கண்காணிக்க வேண்டும். குடும்பத்தாரால் ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் அரவணைப்பு தேவை.

அதிக நேரம் உங்கள் பிள்ளைகளுடன் செலவழியுங்கள். வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வத்தை தூண்டும் விதமாக அவர்களை பழக்கப்படுத்துங்கள்.

பெற்றோருக்கு உங்கள் அறிவுரை என்ன?

அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள், அவர்களுக்குரிய பக்குவம் வந்தவுடன் இணையதள செயல்பாட்டுக்கு அனுமதியுங்கள்

இளைய சமுதாயத்தினர் இதை விளையாடாதீர்கள் என்பது தான் என் வேண்டுகோள், எத்தனையோ நல்ல விளையாட்டுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அதை விளையாடலாம்.  விளையாட்டை விபரீதம் ஆக்காதீர்கள்.

இதில் சிக்கிக்கொள்பவர்கள் இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவர்கள் விளையாட்டினால் பாதிக்கப்பட்டார்களா என்பதை கண்காணிக்க வேண்டும், மன அழுத்தம் என்றால் அதற்குரிய சிகிச்சையை பெற்றோர் அளிக்க வேண்டும்.

டாஸ்க் கொடுத்து செய்யாவிட்டால் சொந்தத் தகவல்களை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டப்படுகிறார்கள் அவ்வாறு சிக்கிக்கொண்டோம் என்று நினைப்பவர்கள் சைபர் பிரிவை நாடலாமா?

அப்படி நடப்பதாக தகவல் வரவில்லை? இது விளையாட்டு அதில் போய் விளையாடாதீர்கள், என்று தான் சொல்கிறோம். ஒருவேளை அப்படி மிரட்டும் தகவல் புகாராக வந்தால் அது பற்றியும் விசாரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x