

கோவை: அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுத்தால்தான் பணிகள் நடக்கும் என்ற சூழ்நிலையை திமுகவினர் உருவாக்கிவிட்டனர் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. பாலங்கள், சாலைகள் போன்ற பணிகள் அனைத்தும் மெதுவாக நடைபெறுகின்றன.
புதியதாக எந்த திட்டமும் திமுக கொண்டு வரவில்லை. மாநகராட்சி, தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுத்தால்தான் பணிகள் நடக்கும் என்ற சூழ்நிலையை திமுகவினர் உருவாக்கி விட்டனர். அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் இப்போது அலுவல் ரீதியாக எந்த கூட்டங்களும் நடத்தப்படவில்லை. திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களும் இந்த ஆட்சி எப்போது போகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.