Published : 13 Sep 2017 08:28 AM
Last Updated : 13 Sep 2017 08:28 AM

சட்டப்பேரவையை முதல்வர் கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

முதல்வர் பழனிசாமிக்கு தைரியம் இருந்து சட்டப்பேரவையை கூட்டினால் திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது உள்கட்சி விவகாரமாகும். எனவே, இதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. 21 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவேதான் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஒரு வாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். மக்கள் மன்றத்தில் போராடுவோம் என அறிவித்திருந்தோம்.

அதன்படி, ஜனநாயக அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (செப். 12) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக முதல்வரும், அமைச்சர்களும் கூறி வருகின்றனர். சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்த பிறகு அதைக் கூட்டும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது. முதல்வருக்கு தைரியம் இருந்தால் ஆளுநருக்கு பரிந்துரை செய்து சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தட்டும். அப்படி கூட்டினால் திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

முதல்வர் பழனிசாமி என்னைப் பற்றி விமர்சித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக தொடர்ந்தால் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். தனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். விளம்பரத்துக்காக அவர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரக் கூடாது என்பது திமுகவின் கொள்கை. கருணாநிதியின் உணர்வும் அதுதான். எனவே, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர என்றும் திமுக விரும்பியதில்லை. இனியும் வர மாட்டோம்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதைத்தான் திமுக சார்பில் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x