

சென்னை: அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ளஅவரது சிலைக்கு நாளை மாலைஅணிவிக்க இந்து மக்கள் கட்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை (ஏப்.14) அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னைவடக்கு மண்டல வழக்கறிஞர் பிரிவு தலைவரான ஏ.அருண்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்தகாலங்களில் இந்து மக்கள் கட்சியினர் மாலை அணிவிக்க சென்ற போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், அனுமதியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த முறை மாலை அணிவிக்க சென்றபோது அளிக்கப்பட்ட உத்தரவாதத்தைப்போல மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமென மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்து மக்கள் கட்சி சார்பில், அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவிக்க செல்லும்போது பிறரைப்பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனப்பொட்டு, விபூதி, குங்குமம் அணிவிக்க மாட்டோம், காவல்துறை வாகனத்தில் சென்று வருவோம் என உத்தரவாதம் அளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதையேற்ற நீதிபதி சுந்தர் மோகன், ஏப்.14 அன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் 9 பேர் மட்டும் போலீஸாரின் வாகனத்தி்ல் சென்று, மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.