பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை
Updated on
1 min read

சென்னை: கலாக்ஷேத்ராவில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அடையாறு போலீஸார், பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, மாதவரத்தில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை போலீஸார் கைது செய்தனர்.

6 வாரங்களுக்குள்... இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்துவழக்காகப் பதிவு செய்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணைய புலனாய்வு பிரிவு ஐஜி-க்கு உத்தரவிடப்பட்டதையடுத்து, ஆணைய எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையிலான காவல் அதிகாரிகள் நேற்று முன்தினம் கலாக்ஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் உள்ளிட்ட 6 பேரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்றுடன் தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவிகள், ஆசிரியர்கள் என 30-க்கும் மேற்பட்டோரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in