

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து வியாழக்கிழமை கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன்படி, ஏப்ரல் 21-ம் தேதி 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழக்கமாக தினந்தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழ் வருட பிறப்புக்கு 300 பேருந்துகளும் ரம்ஜான் பண்டிகைக்கு 200 பேருந்துகளும் என்று மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது" என்று அவர்கள் கூறினர்.