Published : 11 Sep 2017 10:25 AM
Last Updated : 11 Sep 2017 10:25 AM

மயிலாப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பணியாளர்கள் விஷம் குடித்து தற்கொலை: காதல் விவகாரம் காரணமா?

மயிலாப்பூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் 2 மாநகராட்சி பணியாளர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு காதல் விவகாரம் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையம் எதிரே சென்னை மாநகராட்சி 125-வது வார்டு அலுவலகம் உள்ளது. இதில் முதல் மாடியில் துப்புரவு தொழிலாளர்களுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் சுகாதாரத் துறை உதவியாளராக பணி செய்து வந்த ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியைச் சேர்ந்த துளசி (31) என்பவர் நேற்று காலை விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு அதே அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்து வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த காமாட்சி (35) என்ற பெண் ஊழியரும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 2 பேரின் உடல்களையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறியதாது:

துளசிக்கு திருமணமாகவில்லை. பெண்துப்புரவு தொழிலாளியான காமாட்சிக்கு திருமணமாகி குழந்தை இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் கணவர் இறந்து விட்டார். இரண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் பணி செய்து வந்ததால் நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் துளசிக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளனர். அப்போது காமாட்சியுடனான நட்பை துண்டித்து விடுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் மனம் உடைந்த துளசி, இதுபற்றி காமாட்சியிடம் தெரிவித்துள்ளார்.

சேர்ந்து வாழ முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை இருவரும் எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x