Published : 05 Sep 2017 04:27 PM
Last Updated : 05 Sep 2017 04:27 PM

சென்னை: மகனை கொன்ற தாய் போலீஸில் சரண்

குடிபோதையில் தினமும் தகராறு செய்து கொடுமை படுத்திய மகன் தலையில் கல்லைப்போடு கொலை செய்த தாயார் போலீஸாரிடம் சரணடைந்தார்.

சென்னை, திருவேற்காடு, அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி(57). இவரது மகன் செந்தில்(37). இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். செந்திலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் தாயாரை அடித்து கொடுமை படுத்துவது அவருக்கு வழக்கமாக இருந்துள்ளது.

வேலைக்கு போகாததால் வீட்டுச்செலவுக்காக தாயார் சரஸ்வதியும், மனைவி காமாட்சியும் அருகிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பணி புரிந்துவந்தனர். அந்த வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

ஆனாலும் அந்த பணத்தையும் செந்தில் அவர்களை அடித்துப் பறித்துச் சென்று குடித்துவிடுவாராம். நேற்று முன் தினம் வழக்கம்போல் போதையில் வந்த செந்தில் மனைவி காமாட்சியையும், மூன்று பிள்ளைகளையும் அடித்துள்ளார்.

கொடுமை தாங்காமல் மனைவி காமாட்சி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தாயார் சரஸ்வதி மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த செந்தில் தாயார் சரஸ்வதியிடம் இரவு முழுதும் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் விடியற்காலையில் செந்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது  மகனால் பாதிக்கப்பட்ட தாய் சரஸ்வதி செந்தில் தலைமேல் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே செந்தில் இறந்து போனார்.

உடனடியாக திருவேற்காடு காவல்நிலையத்திற்கு சென்ற சரஸ்வதி தனது மகன் தலைமீது கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது பற்றி கூறி சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பிணமாக கிடந்த செந்தில் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x