Published : 12 Sep 2017 09:53 AM
Last Updated : 12 Sep 2017 09:53 AM

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது: லுக் - அவுட் நோட்டீஸை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு - செப்டம்பர் 18-ம் தேதி அடுத்தகட்ட விசாரணை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டதால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை நீடிக்கிறது.

‘மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்து இருக்கிறார். இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளது’ என்ற குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தினர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, அவரை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மத்திய அரசின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடையை ரத்து செய்து லுக் அவுட் நோட்டீஸ் செல்லுபடியாகும் என உத்தரவிட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற 18-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

வெளிநாட்டில் சொத்து இல்லை

‘‘நான் உட்பட எனது தாய், தந்தை, மனைவி என அனைவரும் வருமான வரி கட்டி வருகிறோம். எனக்கு வெளிநாட்டில் எந்த சொத்தும் கிடையாது. வெளிநாட்டில் எனக்கு சொத்துகள் இருப்பதாக சிபிஐ நிரூபித்தால் அந்த சொத்துக்களை மத்திய அரசே எடுத்துக் கொள்ளட்டும்’’ என்று நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்துக்காக வாதாடிய அவரது வழக்கறிஞர் கபில் சிபில், ‘சிபிஐ அதிகாரிகள் பொறுப்பற்ற, அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x