ராகுல் காந்தி தகுதி இழப்பு நடவடிக்கை: தமிழகம் முழுவதும் வரும் ஏப்.15ல் ரயில் மறியல்: கே.எஸ்.அழகிரி

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி
செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி
Updated on
1 min read

சென்னை: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து வரும் ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தலைவர் ராகுல் காந்தி தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி, 76 காங்கிரஸ் மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்த மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்.

பின்னர், ஏப்ரல் 20 ஆம் தேதி, மத்திய அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இந்த போராட்டங்களின் இறுதியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.அதானி குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும்" என்று அவர் கூறினார். பிரதமருக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே, நேற்று பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஆளுங்கட்சியின் கடமை.

எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரு போராட்டம் பதிவு செய்யப்பட வேண்டும். அது அண்ணா சாலையில் நடந்தாலும், வள்ளுவர் கோட்டத்தில் நடந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எதிர்ப்பை இப்படித்தான் இந்த இடத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணுவது ஓர் தாழ்வு மனப்பான்மை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in