Published : 08 Apr 2023 07:32 AM
Last Updated : 08 Apr 2023 07:32 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரி செலுத்துவதற்காக இன்றும், நாளையும் 170 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
காசோலை, கடன் அட்டை சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலமான ஏப்.6-ம் தேதி வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 662 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.
இதை ஊக்குவிக்கும் பொருட்டு, பெரும்பான்மையான சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியை எளிதாக செலுத்த மாநகராட்சி சார்பில் சொத்துவரி வசூல் சிறப்பு முகாம்கள் வார இறுதி நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்றும், நாளையும் தலா 170 இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, காசோலை, கடன் மற்றும் பற்று அட்டை மூலம் சொத்துவரி வசூலிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT