தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் ரூ.4 கோடி முறைகேடு என வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் ரூ.4 கோடி முறைகேடு என வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்து நிதியில் ரூ.4 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்மேல்பாக்கம் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் விவேக், ஷோபனா மற்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மிகப் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் இந்த பஞ்சாயத்திற்கு வருவாய் அதிகம் வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இந்த பஞ்சாயத்து கணக்கில் ரூ.32 கோடி இருந்தது.

ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.4.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மினி மோட்டார்களை பராமரிக்க ரூ.1.49 கோடியும், குழாய் இணைப்புகளை பராமரிக்க ரூ.1.27 கோடியும், தெரு விளக்குகளை பராமரிக்க ரூ. 78 லட்சமும், அலுவலக செலவுக்கு ரூ.33 லட்சம் உள்பட ரூ. 4.1 கோடியை செலவு செய்வதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று உயர் அதிகாரிகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 30-ந் தேதி புகார்கள் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் என் .ஜோதி ஆஜராகி, "பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் பெரும் தொகையை செலவு செய்துள்ளனர். இந்த செலவு கணக்கை பார்க்கும் போது, பராமரிப்புக்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்ததற்கு அந்தப் பொருட்களையே வாங்கி இருக்கலாம். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ரூ.4 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர். இது குறித்து புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை" என்று வாதிட்டார். அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், புகார் கொடுத்து ஓர் ஆண்டு காலம் கடந்தும் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இவ்வளவு காலதாமதம் செய்யும்போது ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும் என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in