முதல்வரின் திறனறி தேர்வு திட்டம் தொடக்கம்; அனைவரும் படிக்கும் சிறந்த இடம் அரசுப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முதல்வரின் திறனறி தேர்வு திட்டம் தொடக்கம்; அனைவரும் படிக்கும் சிறந்த இடம் அரசுப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பி.எஸ். தரவுப் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்பில் சேர, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில், 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செயல்முறை பயிற்சிகள் அளிக்கும் வகையில், 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செயல்முறைப் பெட்டகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கவும், பள்ளிகளில் தரமான கற்றல்சூழலை உருவாக்கவும் பல்வேறுமுன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருகின்றன.

மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்க அரசு பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறப்பு வாய்ந்த சென்னை ஐஐடியுடன், பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ள ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களை நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் பயில தயார்படுத்தும்.

முதல்கட்டமாக, சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பி.எஸ். தரவுப் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்பில் சேர, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில், 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு திட்டங்களின் தொடர்ச்சியாக தற்போது ‘தமிழ்நாடு முதல்வரின் திறனறி தேர்வு திட்டம்’ என்ற முக்கியமான திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களைஊக்குவித்து, உயர் கல்வியைதொய்வின்றி தொடர உதவுவதே இதன் நோக்கம்.

ரூ.1,000 உதவித் தொகை: இதில் 10-ம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ஐஐடிபோன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மூலம் உயர்கல்விக்கு வழிகாட்டப்படும். அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வி என்பது வேலைக்கு தகுதிப்படுத்துவதாக மட்டும் இருக்க கூடாது. மாணவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அறிவாற்றலை மட்டுமின்றி, மன ஆற்றலையும் வளர்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னைஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in