

மதுரை: யூடியூப்பரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலி வீடியோ வெளியிட்டதாக பிஹாரைச் சேர்ந்த யூ-டியூப்பர் மணீஷ் காஷ்யப் என்பவரை கடந்த வாரம் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
அவரை ஏப். 3-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதித்துறை நடுவர் அனுமதி வழங்கினார். போலீஸ் காவல் முடிந்து மதுரை மத்திய சிறையில் மணீஷ்காஷ்யப் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை மீண்டும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீஸார் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மணீஷ்காஷ்யப் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார். அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை பிஹார் மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் மேலும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதித்துறை நடுவர் டீலாபானு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இறுதியில் போலீஸ் காவல் கோரும் மனுவை தள்ளுபடி செய்தும், மணீஷ் காஷ்யப்பை ஏப். 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.