தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: 5 பேர் பலத்த காயம்

தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: 5 பேர் பலத்த காயம்
Updated on
1 min read

காரைக்கால்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால், நாகை, மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த எஸ்.இவாஸ்(25), எம்.கோவிந்தன்(43), எம்.கிருஷ்ணமூர்த்தி(38), எஸ்.மனோ(33), எஸ்.அஜித்(27),மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சிவகுரு(40), கே.கோவிந்தன்(30), வி.ஆறுமுகம்(42), கே.கலியமூர்த்தி(29), சின்னங்குடியைச் சேர்ந்த பி.ராஜ்(36), நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஜி.மெலின்(19), கே.கார்த்தி(36) ஆகிய 12 மீனவர்கள் கடந்த 1-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரை அருகே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கண்காணிப்பு படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகில் ஏறி துப்பாக்கி முனையில் மீனவர்கள் அனைவரையும் சரமாரியாக தாக்கிமீன்கள் மற்றும் வலைகள் உள்ளிட்டப் பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு வந்தஇந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று மாலைகாரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு காரைக்கால் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், 12 பேரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பலத்த காயமடைந்த எஸ்.இவாஸ், கே.கார்த்தி, ஜி.மெலின், எஸ்.அஜித், எஸ்.சிவகுரு ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியது: இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியை காண்பித்து சுற்றி வளைத்து எங்கள் படகில் ஏறி, இரும்பு பைப் உள்ளிட்டவற்றால் எங்களை தாக்கினர்.

மேலும், ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலைகள், ரோப், 7 செல்போன்கள், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர். அதன் பின்னர் வேறு ஒரு படகில் வந்த மீனவர்கள் மூலம் வாக்கி டாக்கியில் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் அவர்கள் வந்து எங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் என்றனர்.

கடந்த பிப்.24-ம் தேதி தரங்கம்பாடி மீனவர்கள் 6 பேர் மீதும், 25-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 11 மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in