Last Updated : 25 Sep, 2017 10:26 AM

 

Published : 25 Sep 2017 10:26 AM
Last Updated : 25 Sep 2017 10:26 AM

2025-க்குள் அனைத்து பகுதிகளிலும் தானியங்கி சிக்னல்கள்; விதிமீறல் வாகனங்களை அடையாளம் காண அதிநவீன கேமராக்கள்- சென்னை போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை

சென்னையில் 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் தானியங்கி சிக்னல்களை அமைக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். விதிமீறல் வாகனங்களை அடையாளம் காண முக்கிய சாலைகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 16,092 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,155 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை காவல் மேற்கு மாவட்டமான அண்ணா நகர், அம்பத்தூர், புளியந்தோப்பு பகுதிகளில் மட்டும் இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விதிகளை மீறியதாக 581 வாகன ஓட்டுநர்களின் உரிமம் 6 மாதத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் விதிமுறைகளை மீறியதாக 11 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இணை ஆணையர் தகவல்

“சென்னையில் இந்த ஆண்டில் கடந்த 15-ம் தேதி வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 8, 200 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதில் 3 ஆயிரம் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “போக்குவரத்து விதி மீறல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சென்னை முழுவதும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் விதிமீறல் வாகனங்களை அடையாளம் காண சென்னையில் உள்ள முக்கியமான சிக்னல்கள் அனைத்திலும் அதிக தொழில் நுட்பம் வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் 20 கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் விதிமீறல் வாகனங்களின் எண்களை துல்லியமாக படம் பிடித்து காட்டி விடும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x