

திருவண்ணாமலை: வேலூரில் இருந்து செய்யாறு வழியாக வந்தவாசிக்கு அரசுப் பேருந்து நேற்று சென்றது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் செய்யாறு பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
செய்யாறு அடுத்த பைங்கினர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவர் பேருந்தை ஓட்டினார். வந்தவாசி-செய்யாறு சாலையில், புலிவாய் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபுறமாக ஓட்டுநர் கோட்டீஸ்வரன் திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் மாற்று பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வந்தவாசி தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.