Published : 17 Sep 2017 09:07 AM
Last Updated : 17 Sep 2017 09:07 AM
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை நிறுத்திக்கொள்ளுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
இரண்டு ஓய்வூதியங்கள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் ஆர். சரத்குமார். அந்த அடிப்படையில் அவருக்கு இரண்டு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்.பி. ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மாநிலங்களவை செயலர் தேஷ் தீபக் வர்மாவுக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளேன்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றன.
எனவே, இந்த ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்கும் சிலரை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் மீதுள்ள பற்று
அந்த அடிப்படையில், நாட்டின் மீது உள்ள பற்றை வெளிகாட்டும் விதமாக எனக்கு அளித்து வரும் எம்பி ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சமையல் எரிவாயு மானியத்தை பலர் விட்டுக் கொடுத்துள்ள நிலையில் நான் ஓய்வூதியத்தை விட்டுக் கொடுக்கிறேன்.
இந்த செயலை மற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றினால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். எனவே என்னுடைய ஓய்வூதியத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT