Published : 22 Sep 2017 11:48 AM
Last Updated : 22 Sep 2017 11:48 AM

அணி தாவினார் தினகரன் ஆதரவு எம்.பி: எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு

தினகரன் ஆதரவு எம்.பி வசந்தி முருகேசன் திடீரென அணி தாவினார். இதனால் தினகரன் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது.

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு தினகரன் தரப்பு தனியாக இயங்கி வருகிறது. 22 எம்.எல்.ஏக்களுடன், 6 எம்பிக்களுடன் தினகரன் அணியினர் தனி அணியாக இயங்கி வந்தனர். இந்த அணிக்கு கடந்த வாரம் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ நடிகர் கருணாஸும் ஆதரவு கொடுத்தார்.

21 ஆதரவு எம்.எல்.ஏக்களில் 18 பேர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இதனால் தினகரன் தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தகுதி நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டால் அது எடப்பாடி அரசுக்கு ஆதரவாக அமையும் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தினகரன் அணியில் ஆரம்பம் முதலே 6 எம்.பி.,க்கள் ஆதரவு இருந்தது. 1.எ.பி.நாகராஜன் (கோவை எம்பி), 2.விஜிலாசத்யானந்த் (ராஜ்யசபா எம்.பி) 3.வசந்தி முருகேசன்(தென்காசி), 4.என்.கோகுலகிருஷ்ணன் (ராஜ்யசபா எம்பி), 5.எ.நவநீதகிருஷ்ணன் (ராஜ்யசபா எம்பி),6.ராதாகிருஷ்ணன் (விருதுநகர் எம்பி) உள்ளிட்ட 6 எம்பிக்கள் ஆதரவு இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் மேலும் 2 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர்.

செங்குட்டுவன் (வேலூர் எம்பி), எம்.உதயகுமார் (திண்டுக்கல் எம்பி) ஆகியோர் தினகரன் அணியில் இணைந்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்பிக்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் தினகரன் அணியில் இருந்து தென்காசி தனித்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தி முருகேசன் எம்.பி, திடீரென அணி மாறினார். முதல்வர் பழனிச்சாமியை இன்று அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மேலூர் பொதுக்கூட்டத்துக்கு பிறகு ஒதுங்கியே இருந்து வந்த வசந்தி முருகேசன் தற்போது திடீரென அணி மாறியுள்ளார். ஆரம்பம் முதலே தினகரன் ஆதரவு எம்.பியாக இருந்த வசந்தி முருகேசன் தற்போது அணி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் பேட்டி அளித்த வசந்தி முருகேசன், "ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், ஆனால் டிடிவி தினகரன் திமுகவுடன் சேர்ந்துக்கொண்டு ஆட்சியை கவிழ்ப்பேன் என்று மிரட்டுகிறார். அதனாலேயே எனது நிலையை மாற்றி எடப்பாடி அணிக்கு ஆதரவளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x