Published : 26 Sep 2017 08:30 AM
Last Updated : 26 Sep 2017 08:30 AM

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தமிழக கல்லூரி மாணவர்: ஈரானில் தீவிரவாதிகளுடன் தங்கி போர் பயிற்சி

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் தமிழக கல்லூரி மாணவர் ஒருவர் இணைந்து, ஈரானில் தீவிரவாதிகளுடன் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என 2014-ல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அப்போதைய தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து 2014 டிசம்பரில் ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் நடமாட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக சென்றது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூலம் மேலும் ஆட்களைத் திரட்டி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் சந்தேகித்தனர்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் இயக்கத்தில் சேர முயன்ற பலரை தொடக்கத்திலேயே கண்டறிந்து அவர்களை எச்சரித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் படித்த கல்லூரி மாணவர் ஒருவர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

வேலூரில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.டெக் படிப்பவர் நஜீப் (22). இவரது பெற்றோர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வசிக்கின்றனர். துபாயில் பி.டெக் படிப்பை முடித்த நஜீப், வேலூரில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.டெக் படிப்பில் சேர்ந்தார். கல்லூரிக்கு அருகே தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நஜீப், தனது பெற்றோரிடம் போனில் பேசவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கல்லூரிக்கு நேரில் வந்து விசாரித்தபோது கடந்த ஒரு மாதமாக அவர் கல்லூரிக்கும் வரவில்லை என்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து மலப்புரம் காவல் நிலையத்திலும், வேலூர் காவல் நிலையத்திலும் நஜீப்பை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். இரு மாநில போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘நஜீப் துபாயில் படித்தபோது, ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த நபர்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று, அவர்களுடன் தங்கியிருந்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x