Published : 28 Sep 2017 05:25 PM
Last Updated : 28 Sep 2017 05:25 PM

சங்கரன் கோவிலில் 23 கிலோ புராதன வெள்ளிப் பல்லக்கை உருக்கி விற்ற ஊழியர்கள்: 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்

புகழ்ப்பெற்ற சங்கரன் கோவிலில் அமைந்துள்ள சங்கரன் நயினார் கோவிலில் இருந்த பல கோடி மதிப்புள்ள புராதன வெள்ளிப்பல்லக்கை உருக்கி விற்ற துப்புரவு ஊழியர்கள் மூன்று பேர், நகைப்பட்டறை அதிபர் உடபட 4 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சங்கரன்கோவில் ராஜபாளயதிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலைக்கும் , கோவில்பட்டியிலிருந்து தென்காசி-கொல்லம் சாலைக்கும் இணைப்பாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கர நயினார் கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன் கோவிலாக பின்னர் மருவியது.

இக்கோவிலின் சங்கரலிங்க சுவாமி; கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மனை மக்கள் வழிப்பட்டு வருகின்றனர். உக்கிரப்பாண்டியன் என்னும் மன்னனால் இக்கோவில் கி.பி.1022 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் ஆடித் தவசு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே கொண்டிருந்தது.

பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் சொந்தமாக உள்ளது. கோவிலில் 100க்கும் மேற்பட்ட புராதன சின்னங்களும், அம்மனின் வாகனங்களும், தங்கரதம், வெள்ளிப்பல்லக்கு உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த கோவிலின் வெள்ளிப்பல்லக்கு 23 கிலோ எடைகொண்டது. பலகோடி மதிப்புள்ளது.

கோவிலின் கர்ப்பகிரகத்துக்கு பின் புறம் ரகசிய அறையில் உள்ளது. பல நூற்றாண்டுகளை கடந்த இந்த பல்லக்கு கோவில் ஊழியர்களால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு உருக்கி விற்கப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு 3 ஊழியர்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்து அறநிலைத்துறையின் கீழ் வரும் இக்கோவிலில் போலீஸாரும் , அறநிலைத்துறை அதிகாரிகளும் காட்டிய அக்கறையின்மை காரணமாக 23 கிலோ புராதன வெள்ளிப்பல்லக்கு உருக்கி விற்கப்பட்டு விட்டதாக அங்குள்ள பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சங்கர நயினார் கோவிலில் துப்புரவு பணிக்கு வந்த ஒப்பந்த ஊழியர்கள் பட்டத்து ராஜா, காளிதாஸ், காளிராஜ் மூவரும் வெள்ளிப்பல்லக்கை கண்டுள்ளனர். யாரும் கண்டுக்கொள்ளாமல் பராமரிப்பின்றி இருந்த வெள்ளிப்பல்லக்கை விற்றால் நன்றாக பணம் பார்க்கலாம் என்று முடிவு செய்த அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கொஞ்சம் கொஞ்சமாக பல்லக்கை உருக்கி விற்றுள்ளனர்.

பல்லக்கை பராமரிக்க வேண்டிய கோவிலின் 4 அர்ச்சகர்களும், அறநிலைத்துறை அதிகாரி பொன்சாமிநாதனும் கண்டுக்கொள்ளாதது மூவருக்கும் வசதியாகி போனது. இந்த பிரச்சனை பொதுமக்கள், பக்தர்கள் இடையே கசிந்தது. அறநிலைத்துறை அதிகாரி மாற்றப்பட்டு துணை ஆணையர் செல்லதுரை என்பவர் வந்து அனைத்து ஆவணங்களையும் சோதித்ததில் பல்லக்கு விவகாரம் தெரிந்து, கடந்த ஜூலை மாதம் போலீஸுக்கு புகார் அளித்தும் போலீஸார் சி.எஸ்.ஆர் போட்டதுடன் நிறுத்திக்கொண்டார்கள்.

அதன் பின்னர் இந்த பிரச்சனை பொதுமக்கள் மூலமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐஜி பொன் மாணிக்கவேல் கவனத்துக்கு கொண்டு வரப்பட உடனடியாக தனிப்படை போலீஸாரை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து நெல்லை சென்ற சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் வெள்ளிப்பல்லக்கை உருகி விற்ற பட்டத்து ராஜா, காளிதாஸ், காளிராஜா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மூவரும் வெள்ளியை உருக்கி விற்பதற்கு உடந்தையாக இருந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளர் நாகராஜையும் போலீசார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x