காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை 10 நாட்களும் நடத்த ஐகோர்ட் உத்தரவு

காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை 10 நாட்களும் நடத்த ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை திருவிழாவின் அனைத்து நாட்களிலும் நடத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில், பத்து நாட்களும் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ உமையாம்பிகை, ஸ்ரீ கந்தர் சிலைகளை ஒரே வாகனத்தில் வைத்து கோயிலைச் சுற்றி, உலா வருவது வழக்கம்.

இது தொடர்பாக அரசும், உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், இந்த ஆண்டு, திருவிழாவின் முதல் நாள், 9வது நாள், 10ஆம் நாள் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சுவாமி உலா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், 10 நாட்களும் சிலைகளை உலா கொண்டு வரக் கோரி பால சர்வேஸ்வர குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு தரப்பில், 10 நாட்களும் சாமிகளின் உலாவை நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது, அதை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து நாட்களும் சுவாமி உலா நடத்தும் அரசின் முடிவை தடுப்பவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அமைதியான முறையில் விழாவை நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டுமென புதுச்சேரி காவல் துறைக்கும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in