பாலிடெக்னிக்குகளில் புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பாலிடெக்னிக்குகளில் புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை:பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி அறி வித்தார்.

சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதன் இறுதியில் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முன்னணி மாநிலமாகதிகழ்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் சில நல்ல அம்சங்கள் இருந்தபோதும், மும்மொழிக் கொள்கை, 3, 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு உட்பட பல்வேறு திட்டங்கள் ஏற்புடையதாக இல்லை. அதனால்தான் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையானது வடிவமைக்கப்பட்டு வரு கிறது.

சமமான ஊதியம் நிர்ணயம்: கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாறுபட்ட ஊதிய விகிதம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையை சீரமைத்து அனைவருக்கும் சமமான ஊதியம்நிர்ணயம் செய்யப்பட உள்ளது. மேலும், தற்போதைய ஊதியமும்உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்புமென்பொருள் ரூ.150 கோடியில் நிறுவப்படும். 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கேற்ப புதிய சான்றிதழ் (சாண்ட்விச்) பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 7 அரசுபொறியியல், 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கண்ணாடியிழை மூலம் 1 ஜிபிபிஎஸ் அளவிலான தொடர் இணையதள வசதி இணைப்பு வழங்கப் படும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கெலமங்கலம், தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஆகிய 3 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில்,பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் மற்றும் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.180 கோடியில் மேம்படுத்தப்படும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் பெண்கள் விடுதி கட்டப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்பன உட்பட 23 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in