அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 3-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் | கோப்புப் படம்
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என கூறி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மட்டும், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 31) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இரு தரப்பும் பதில் அளித்தன. இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 3 ஆம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in