தி.மலையில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு குருமன்ஸ் மாணவர்கள் போராட்டம்

பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை மண்டியிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள். படம்: இரா.தினேஷ்குமார்.
பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை மண்டியிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள். படம்: இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு நடைபெற்றபோராட்டத்தில் குருமன்ஸ் இன மாணவர்கள் மண்டியிட்டு பங்கேற்றனர்.

பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி குருமன்ஸ் இன மக்கள் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்றுமுற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், திண்டிவனம் ரயில்வே ‘கேட்’ மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர், திருவண்ணாமலை - சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 2 நிமிடத்தில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

பின்னர் அவர்கள், முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது, பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி பள்ளி மாணவர்கள், மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

குருமன்ஸ் இன மக்கள் கூறும்போது, “பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க, திருவண்ணாமலை கோட்டாட்சியர் பதவியில் உள்ளவர்கள் மறுக்கின்றனர். இதனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் எங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மறுக்கப்படுகிறது. குருமன்ஸ் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்” என்றனர்.

இதையடுத்து ஆட்சியர் பா.முருகேஷிடம் முக்கிய பிரமுகர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பது என முடிவு செய்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடியிருந்தவர்கள் புறப்பட்டு சென்றனர். குருமன்ஸ் இன மக்கள் போராட்டத்தை தொடர்ந்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஜுலை மாதம் வருகை தந்தபோது, கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய குருமன்ஸ் இன மக்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in