Published : 09 Sep 2017 12:21 PM
Last Updated : 09 Sep 2017 12:21 PM

உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை அச்சுறுத்தி கைது செய்வதா?- ஸ்டாலின் கண்டனம்

மாணவி அனிதா மரணத்திற்காக நீதி கேட்டு போராடும் மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தி கைது செய்யும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்து, தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, திருச்சி விஸ்வநாதம் அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இன்று நேரில் சந்தித்த, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

மாணவி அனிதா மரணத்திற்குக் காரணமான மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்தும், மருத்துவக் கல்வியில் மாணவர்களின் உரிமைகளை நிலை நிறுத்தவும், உயர்கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் இணைத்து மாநில உரிமைகளை மீட்கவும், திமுக சார்பில் தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் குறித்து அவர்களிடம் பேசினார்.

மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, மு.க.ஸ்டாலின் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, கல்லூரி மாணவர்கள் இன்று ஏறக்குறைய ஒரு வாரமாக தங்களது உடலை வருத்திக் கொண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது உணர்வை எண்ணிப் பார்த்து, மத்திய - மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி, உரிமைக்காகப் போராடும் மாணவர்களை கொடுமைப்படுத்துவது, அச்சுறுத்துவது, அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x