கம்போடியா, தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லி. மாணவி தேர்வு

கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி ஜெயவர்தனி
கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி ஜெயவர்தனி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி ஜெயவர்தனி(12) தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியைச் சேர்ந்த மர வியாபாரி குடியரசு(43). இவரது மனைவி கீதா(34). இவர்களது மகள்கள் கவியரசி(16) 10-ம் வகுப்பு, ஜெயவர்தினி(12), 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். குடியரசு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி யோகா பயிற்சிக்கு சென்று வரு கிறார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி, குழந்தைகளையும் யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றார். இவரது மகள் ஜெயவர்தனி 8 மாதங்களில் பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான சுமார் 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.

மேலும் தென் இந்திய அளவில் 3 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஜனவரியில் நடந்த 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயது பிரிவில் மாணவி ஜெயவர்தினி கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.

தென்காசி மாவட்டம் சிவசைலம் பகுதியில் குட்லைப் ஆசிரமம் மற்றும் யோகா கலாச்சார மையம் சார்பில் ஜனவரியில் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் மாணவி ஜெயவர்தனி 12-13 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம், தாய்லாந்தில் வருகிற டிசம்பரில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழநியில் மார்ச் 11-ல் நடந்த தேசிய யோகா போட்டியில் மாணவி ஜெயவர்தினி கலந்து கொண்டு 12 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையடுத்து கம்போடியாவில் மே 27-ல் நடைபெறும் சர்வதேச யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க ஜெயவர்தனி தேர்வாகி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in