Published : 28 Mar 2023 04:07 PM
Last Updated : 28 Mar 2023 04:07 PM

தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 258.06 கோடி பயண நடைகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோப்புப்படம்

சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில் 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் ரூ.888 சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கட்டணமில்லா பயண வசதியினை திருநங்கைகளுக்கு விரிவுப்படுத்தியதன் வாயிலாக 14.75 பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

07.05.2021-க்கு முன் 409 வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட 510 பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. மேலும், 206 வழித்தடங்கள் நீடிக்கப்பட்டு, 260 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 352 நடத்துனர் இல்லா பேருந்துகள் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படுவதால் வருவாய் அதிகரித்துள்ளது. சென்னையில் பொதுப் போக்குவரத்தினை ஒருங்கிணைக்க மெட்ரோ ரயில் நிலையத்தினை இணைத்திட ஏதுவாக 30 வழித் தடங்களில் 56 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அமல்படுத்தப்பட்டு பயனடைந்து வருகின்றனர். நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, இணையவழிப் பயணச் சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 6,615 பயணிகள் பயன் அடைந்துள்ளனர்.

பயணிகள் மற்றும் பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்திட உதவி எண் 1800 599 1500 -ஆனது கடந்த 09.03.2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை 2,302 அழைப்புகள் பெறப்பட்டு, 2,154 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ‘அரசு பஸ்’ என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x