Published : 28 Mar 2023 12:15 PM
Last Updated : 28 Mar 2023 12:15 PM

ஏப்.5 முதல் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்: இபிஎஸ்

சென்னை: வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரான பின்னர் அவர் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x