பால் கெட்டுப்போகவில்லை இயந்திர பழுதே காரணம்: ஆவின் அதிகாரிகள் விளக்கம்

பால் கெட்டுப்போகவில்லை இயந்திர பழுதே காரணம்: ஆவின் அதிகாரிகள் விளக்கம்

Published on

சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து அனுப்பப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் குற்றச்சாட்டினர். இந்த பால் உற்பத்தியின்போது, பால் பவுடர் மற்றும்வெண்ணெய் சரியாக சமன்படுத்தப்படாததால் கெட்டுப்போகியுள்ளது என்றும், நகரின் பலபகுதிகளில், பால் கெட்டுப்போகிஉள்ளதாக பொதுமக்கள் கூறி, வேறு பால் பாக்கெட்களை பெற்று சென்றதாகவும் பால் முகவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் பால் பதப்படுத்தும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், பால் பவுடர், வெண்னெய் சரியாக சமன்படுத்தப்படாமல் பால் உற்பத்தியாகி, பால் விநியோகித்தபோது, பால் கட்டியாக இருந்துள்ளது. இதை வைத்து பால் கெட்டுப்போனதாக தெரிவித்தனர்.

ஆனால், பால் கெட்டுப்போகவில்லை. சுட வைத்து பயன்படுத்த முடியும். பழுதான இயந்திரத்துக்கு மாற்றாக வேறு இயந்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், நேற்று காலை பால் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில், பால் விநியோகிப்பதில் அட்டைதாரர்களுக்கு எந்தவித தாமதமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in