Published : 06 Sep 2017 09:00 AM
Last Updated : 06 Sep 2017 09:00 AM

சர்வதேச அளவில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்க 25-ம் ஆண்டு வெள்ளி விழா மாநாடு: சென்னையில் 4 நாட்கள் நடக்கிறது

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 25-வது வெள்ளிவிழா மாநாடு நடைபெறு கிறது.

இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலாளரும், நரம்பியல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.மீனாட்சிசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா மாநாடு (IANCON) - 2017, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் செப்.7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்திய நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1997-ம் ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற்றது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் சென்னையில் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் இந்திய நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மற்றும் அமெரிக்க இந்திய நரம்பியல் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்கின் றனர்.

நரம்பியல் சிகிச்சை மற்றும் பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, ஒற்றைத் தலை வலி உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகம் முன்னேறியுள்ளது பற்றியும் நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் சிகிச்சை முறைகளும் பரிமாறிக் கொள்ளப்படும்.

மாநாட்டில் மருத்துவ மாணவர்களுக்கு நரம்பியல் சிகிச்சை குறித்து வகுப்புகள் எடுக்கப்படும். மாநாட்டில் நரம்பியல் சிகிச்சை குறித்து 400-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்படும்.

இதுபோக 10-ம் தேதி காலை 6 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மூளை குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த ஓட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் கலந்துக் கொள்கின்றனர். இவ்வாறு டாக்டர் யு.மீனாட்சிசுந்தரம் தெரிவித் தார்.

பேட்டியின் போது இந்திய நரம்பியல் சங்கத்தின் (IAN) லைவர் ஏ.வி.ஸ்ரீனிவாசன், மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவர் சி.யு.வேல்முருகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x